Showing posts with label புரிஞ்சுக்கோ.....(கவிதை). Show all posts
Showing posts with label புரிஞ்சுக்கோ.....(கவிதை). Show all posts
புரிஞ்சுக்கோ....(கவிதை)
புரிஞ்சுக்கோ
நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன்.
வீடு மாறி விட்டாயாம்,
உறுதிப்படுத்த,
உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை.
இருந்தும் என்ன?
மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன.
உன் பல்கனிப் புறாக்குஞ்சுகளும்
செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம்.
தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள்.
நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா?
நம் நினைவுகளைத் தாங்கி
உன்னோடலைந்த வீதிகளில் தனியாய் அலைகின்றேன்.
உன்னோடிருந்த வீட்டின் முன்னால்
நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி
குந்தியிருக்கின்றேன்.
யார் கண்டது?
எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று
உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம்.
“புரிஞ்சுக்கோ” என கண்கலங்க
என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றாய்.
பின்நவீனத்துவம்,
பிரேம்-ரமேஷ்,
சிக்மென் பிரைட்,
நீட்ஷே
புரிந்துகொண்ட என்னால்
உன் “புரிஞ்சுக்கோ”வை புரிந்து கொள்ள முடியவில்லை.
பனிப்போர்வைக்குள்
உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே
நான் விறைத்திருக்க
நீ கடந்து போகலாம்
அது நானென்று புரிஞ்சுக்காமல்.
source:karupu.blogspot.com
===============================================
Subscribe to:
Posts (Atom)
